Monday 17 September 2018

ஹிப்போவின் குட்மார்னிங்


7. மனோபாவம் சரியாக வார்க்கப்படுகிறதா?
ன்று 10ம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தேன். வகுப்பிற்குள் நடக்கும் தேர்வுதானே என்கிற பிள்ளைகளின் மனநிலை நன்றாகவே தெரிந்தது. ‘தேர்வுக்குப் பயன்படுத்திய விடைத்தாள்கள் நன்றாக இல்லை, சிலர் நோட்டுப் புத்தகத்திலிருந்து தாளைக் கிழித்து எழுதியிருந்தனர். சொற்றொடர் முழுமையாகாத விடைகள், அளித்தல் (presentation) முறையும் கவலை உண்டாக்கியது.
மனதிற்கு திருப்தி இல்லை. ஒரே ஆதங்கமாக வந்தது. விடைகளை சரியாக எழுதவில்லை என்பது ஒரு குறையாகவே தெரியவில்லை, ஆனால் தேர்வில் குழந்தைகளின் பங்களிப்பு என்பது அவர்களின் மனோபவத்தைக் காண்பிப்பதாக இருந்தது. அதுதான் எனக்கு பெரிதும் சோர்வை அளித்தது. வகுப்புத் தேர்வு என்றாலும் அதனை முறையாக எதிர்கொள்வதும் பங்கேற்பதும் அவர்களின் கடமை அல்லவா? வெறுமனே பிள்ளைகளை, நாளைய தேசத்தின் எதிர்காலம் அது இது என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்கள் அதற்கேற்றத் தலைமைப்பண்பு, வழிகாட்டும் நெறி, இத்தனைப் பெரிய தேசத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான சமூகப் பொறுப்புகளுடன்தான் உருவாகிக் கொண்டிருக்கிறார்களா என்பது நெருங்கிப் பார்த்தால் கவலை வரத்தான் செய்கிறது.
 பொதுவாகவே குழந்தைகள் “நல்லாப் படிக்கனும், பெரிய ஆளா ஆவனும், லைஃப் ல செட்டில் ஆகனும்” என்பதை மட்டுமே கேட்டு வளர்கிறார்கள். மாறாக பின்னாளில், சமூகத்தில் தனக்கான பங்களிப்பு என்னவாக இருக்கவேண்டும்? என்பதற்கான பரந்தப் பார்வைதான் ‘நாம் இன்னும் எவ்வளவு பயணிக்கவேண்டும்’ என்கிறத் தொலைவை அவர்களுக்கு உள்ளபடியே காண்பிக்கும் என்றுத் தோன்றுகிறது. தவிர தன்னை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது என்கிற குறுகிய எல்லை அவர்களுக்குத் தீர்மானிக்கப்படும்போது அவர்கள் விரைவிலேயே அந்த எல்லைகளைக் கடந்துவிட்டதாக அல்லது இது போதும் என்பதாக முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளின் மனோபாவமாக மாற ஆரம்பிக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் என்னவாக இருக்க முடியும் என்று பார்ப்போம்.
சமீபமாக பல்வேறுத் தளத்திலிருந்தும் கல்விமுறை குறித்தும், தேர்வு முறைகள் குறித்தும் முன்வைக்கப் படும் எதிமறைக் கருத்துக்கள், வேறு யாரையும் விட பிள்ளைகளை வேகமாகவும் ஆழமாகவும் சென்றடைகின்றன. அடிப்படை மாற்றங்களுக்கு வித்திடாத இம்மாதிரியான கருத்துக்கள் சம்மந்தப்பட்டவரின் ஒளி வட்டங்களுக்கானது மட்டுமாகவே இருக்கமுடியும். அது ஒரு புறம் என்றால், இம்மாதிரியான எதிர்மறைக் கருத்துக்கள் பெரும்பாலான பதின்ம வயதுக் குழந்தைகளை நடைமுறை வாழ்வில் ஒருவித மெத்தன மன நிலைக்குக் கொண்டுவந்துவிடுகிறது என்கிற விபரீதம் ஏன் யாருக்கும் புரிபடவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. ஏற்கனவே சூழ்ந்திருக்கும் பருவம் சார்ந்த இயற்கையான மனச்சிக்கல்களுக்கு, இப்படியான கல்வி மற்றும் தேர்வு குறித்த எதிர்மறைக் கருத்துக்கள் சௌகரியமான போக்கு என்றாகிவிடுகிறது.
ஆனால் நடைமுறையில் காட்சி வேறாக இருக்கிறது. ‘ஒரு பிள்ளை, உளவியல் தெரிந்தவன், அன்பு, கருணை, ஒழுக்கம், சகிப்புத்தன்மை, சேவை மனம் நிறைந்தவன் கட் ஆஃப் இல்லையென்றாலும் மேல்நிலைத் தேறிவிட்டான், மருத்துவம் படிப்பது கனவு என்கிறத் தகுதிகளோடு அவன் மருத்துவக் கலூரிகளில் சேர்ந்துவிட முடிவதற்கில்லை. அதுபோலவே பொறியியலுக்கான அடிப்படைத் தகுதிகளை மட்டுமே வைத்து பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவதும் சாத்தியமில்லை. என்றால் இப்படியான பிரச்சாரங்கள் எளிய மாணவச் சமூகத்தை ஆசுவாசப்படுத்துவதற்குப் பதில் அசட்டையாக்கிவிடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கற்பித்தல் முறைகளில், பிள்ளைகள் பாடங்களை அனுகச்செய்யும் முறைகளில், தேர்வு முறைகளில் அவற்றின் முடிவுகளை எதிர்கொள்ளும் மன நிலைகளில் என இவற்றில் மாற்றம் உண்டாக்கும் புதியக் கல்வியல் தரவுகளே இப்போதையத் தேவை. அவற்றை எதிர்ப்பதான கருத்துக்கள் இல்லை.
தவிர, பிள்ளைகளுக்கு இலக்குகளைப்பற்றியும் அவற்றை அடைவதற்கு, போட்டி மன நிலையும், கடும் பயிற்சியும், விடா முயற்சியுமே அடிப்படை என்பதைப் புரிந்துகொள்வதில் பிள்ளைகளுக்கு எந்தவிதமானத் தடைகளும் இருக்கக்கூடாது. மாணவர்கள் தேர்வுகளை நேசிக்க வேண்டும், அது அவர்களின் எளிய மற்றும் அவசியமானக் கடமை. மேலும் அது அவர்களுக்கான அடைதல் சோதனை.
இங்கே ஒரு விஷயத்தை பேசுவது சரியாக இருக்கும்., சமீபமாக பொறியியல் கல்லுரிகளில் மாணவர்ச் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு குறைந்து வருவதையும், பல கல்லூரிகள் மூடப்படுவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்தச் செய்தி, பொறியியல் படிப்பதில் மாணவர்களுக்கு விருப்பம் குறைந்துவிட்டதெனவும், வேலை வாய்ப்பின்மை போன்றவைதான் இதற்குக் காரணம் என்பதாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் நாம் இதனை இன்னொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால் நிலைமை பெரும் கவலைக்குறியதாக இருப்பதைப் புரியலாம்.
எல்லோருமே மாற்றுத் துறைகளை தேர்ந்துவிடுவதில்லை எனில், முதல் மூன்று நாட்களில் வைக்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவு என்பது அந்தத் தரத்திற்கு பிள்ளைகள் இல்லை என்பதையும் மறைமுகமாகச் சொல்லிவிடுகிறது என்பதுதானே உண்மை., இரண்டாம் கட்டம் முடிந்து, மூன்று, நான்கு, ஐந்தாம் கட்டக் கலந்தாய்வு வரையிலும் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நடைபெறவில்லை என்றால் அந்தத் தரத்திற்கும் பிள்ளைகள் இல்லை என்பதும்தானே உண்மை. எத்தனை விபரீதம் இது? இன்றிலிருந்து குறைந்தபட்சம் இன்னும் 20 - 25 ஆண்டுகளில் இதற்கான விளைவுகளை தேசம் எதிர்கொள்ளவிருக்கிறது. அந்தந்தப் பொறியியல் துறைகளில் உற்பத்தி, சேவைகள் நலிந்து மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறைந்து… உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட தேசத்தின் மனித வளம் பாழாகிக்கொண்டிருக்கிறது.
குழந்தைகளின் இந்த அடைதலைத் தடுத்துவிட்டது எது? அசட்டை, மெத்தனம், பொறுப்பின்மைகள்தானே? ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் காரணமல்ல என்பது பரிதாபமான உண்மை. இதுவெல்லாம் சிறுவயதில் உண்டாக்கப்பட்ட தன்னல எண்ணங்கள், கல்வியல் குறித்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தப்பட்ட எதிர்மறை எண்ணங்களின் நீட்சி என்றால் அது மிகையல்ல.
அன்று விடைத்தாள்களைத் திருத்தும்போது நான் எதிர்கொண்டதும் பிள்ளைகளிடம் அப்படி உருவாகியிருந்த அசட்டை மனங்களைத்தான். தேர்வில் விடைகளைக் கூட பரவாயில்லை என்று எடுத்துக்கொண்டாலும், அளித்தல் முறை முழுமையாகவே இல்லை. ‘மார்ஜின் முறையாக இல்லாமல், எழுத்துக்கள் ஒழுங்கில்லாமல், விடைத்தாள் விவரங்கள் சரியாகப் பூர்த்தி செய்யாமல் என்பதோடு 50 மதிப்பென்களுக்கும் முழுமையாக முயற்சிக்காமல் 10-15 மதிப்பெண்களுக்கு மட்டுமே விடை எழுதியிருக்கிறார்கள்’ என ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் அயற்சியாக இருந்தது.
இந்த நிலையை, மதிப்பெண்தான் தேர்வா, அதை எழுதினால்தான் மாணவனா என்கிற போக்கில் விவாதித்து முடித்துக்கொள்ள முடியாது. அப்படியென்றால் ஆம் தேர்வுகள் முக்கியம்தான், அதை எழுதினால்தான் மாணவன் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலும் வாழ்வு நெடுக விதவிதமான தேர்வுகளை மட்டுமே எதிர்கொள்ளவேண்டியதாய் இருக்கக்கூடிய வாழ்க்கை முறையில், பள்ளித் தேர்வுகள் ஒரு பெரிய வெற்றியை நோக்கிய பயணத்தின் சின்னச் சின்ன அடைதல்களாக, நம்பிக்கையூட்டுவனவாக இருக்கின்றன.  தவிர ஒரு பிள்ளைக்கு அதைவிட வேறென்னக் கடமை இருந்துவிடமுடியும்.
தேர்வைச் சுற்றி நிகழ்கிற ‘தேர்ச்சி இல்லையென்றால் அவ்வளவுதான், வாழ்வே முடிந்துவிட்டது, நீ வேஸ்ட்’ என்பது போன்ற அபத்தங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அவைகள் ஒழிக்கப்படவேண்டியதும் கூட. ஆனால் தேர்வு என்பது ஒரு மாணவனுக்கு பீடு நடைப் போட்டு தன்னை மெய்பிக்கக் கூடிய களம். அதனினும், இந்தப் போட்டியில் மட்டும்தான் லட்சம் பேர் என்றாலும் முதலிடமோ அல்லது அடுத்தடுத்த இடங்களோ எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். குழந்தைகளை இறங்கி விளையாடச் செய்யவேண்டும்.
மேலே குழந்தைகள் தேர்வு எழுதிய முறையைப் பற்றி சொல்லியிருப்பதில் ‘மார்ஜின் போடாதது எல்லாம் ஒரு குற்றமா’ என்று எல்லாம் ஒன்றுமில்லாததுப் போல தோன்றலாம். ஆனால் கவலை உண்டாக்கியது மதிப்பெண்கள் சார்ந்த அடைதல் மட்டுமே அல்ல, அவர்களின் குணாம்சம் பற்றியது. அவையெல்லாம் பிள்ளைகளின் அகச் சூழல் அல்லது குணாதிசயங்களின் வெளிப்பாடுகள் என்கிற நோக்கில் பார்த்தால், திடுக்கிடலாய் இருக்கிறது. பிறகு? மாணவன் என்பது ஒரு சமூகத்தின் வளமல்லவா?
சுமாராக ஒரு பள்ளியில் 2000 மாணவர்கள் என்று வைத்துக்கொண்டால் இன்றைக்கு பல கிராமங்களின் மக்கள் தொகை சில நூறுகள்தான் என்கிற நிலையில், அவர்களின் எதிர்கால வாழ்க்கை முறை என்பது ஒரு சமூக உருவாக்கம் என்று புரியும். என்ன மாதிரியான சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதும் புரியும். ஒரு பள்ளி என்பது சிற்றூர் என்றால், மாநிலங்கள் முழுது இருக்கும் பள்ளிகள் சேர்ந்ததுதான் வருங்கால தேசம். குழந்தைகளை கொஞ்சம் நெருங்கி அவதானித்தால் அவர்கள் எத்தகையச் சமூகத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதைப் புரியலாம்.
குழந்தைகளுக்குத் தாம் மாணவர்கள் என்கிற இருத்தலை, அதற்கான கடமைகளை நேசிக்கச் செய்தல் வேண்டும். கடமைகளை அவர்கள் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும் அவர்களை பின் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் தேவையற்றதாகிவிடும். ஒருவேளை இன்றையச் சமகாலச் சமூகச் சூழல் பொறுப்பற்றது எனில் நேற்றைய மாணவர்கள் முறையாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை ஏற்றுக்கொள்ளாத்தான் வேண்டும்.
இனி, எனது பிள்ளைகள் தேர்வுகளை நல்ல முறையில் எழுதுவார்கள், ஏனெனில் இனி அவர்களுக்குத் தேர்வு என்பது சுமை அல்ல., கடமை, பொறுப்பு, எதிர்காலத்திற்கான சமூக ஆக்கத்தில் தனது பங்கு என்ன என்பதற்கான சுய மதிப்பீடு. ஆம் இனி அவர்களுக்குத் தேர்வு என்பது முழு மதிப்பெண்களுக்கானது அல்ல, முழுமையாகச் செயல்படுவதற்கானது.

Friday 14 September 2018

செத்தவரை கிராமம் பரண், பரையின் தடயங்களை நோக்கி.




- யியற்கை 14.09.2018/ 19:49

இன்று விநாயகர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி விடுமுறை. காலையிலிருந்தே ஏற்கனவே எழுதி முடித்திருந்த கட்டுரைகளை இன்று கூடுமானவரை அதிகம் டைப் செய்துவிடவேண்டும் என்ற முடிவுடன்ஹிப்போவின் குட்மார்னிங்ஓடிக்கொண்டிருந்தது.
இடையே நண்பர் பாலாவுடன் முகநூலில் காமெடியாக வம்படித்துக் கொண்டிருந்தேன், 'இங்கிலிஷ் கர்ஸிவ் எழுதுவதற்காகவும் ஆங்கிலத்தில் பேசுவதற்காகவும் மட்டுமே தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப் படுவதாக (அவசரப் பட்டுச் சொல்லியிருக்கவேண்டும்) சொல்லியதும் காமெடி பரிதாபமாக மாறியது.'
இதனிடையே நண்பகல் 12:54 இருக்கும் தோழர் செஞ்சி தமிழினியன் அழைத்தார். "வேறேதும் திட்டமிடல் இல்லையென்றால் இன்று செத்தவரை சென்றுவரலாமா" என்றார்.
ஏற்கனவெ ஒரு முறை, ஒரு 3 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்வாளை சென்று வரும்போது செத்தவரை ஓவியங்களையும் பார்த்துவிட திட்டமிட்டிருந்தோம் ஆனால் அங்கு வந்து சேர்வதற்குள் இருட்டிவிட்டிருந்தது. அதனால் இம்முறை அவர் கேட்டதுமே காத்திருந்ததைப் போலகண்டிப்பாக, உணவு முடித்து ஒரு 2 மனிக்குப் போகலாமாஎன்றதும் அவர், “வீட்டில் படைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது ஒரு 4 மணிக்குப் போகலாமேஎன்றார். ஒருவழியாகப் பேசி 3 மணிக்கு செல்வதாக பேரம் முடிந்தது. சுண்டலும் கொழுக்கட்டையும் முக்கியமாயிற்றே.
அவரது வீட்டு வாசலில் சென்று நின்றதும், வண்டியின் சத்தம் கேட்டு அவராகவே வந்துவிட்டார். வெளியே வந்தவர் கையில் பொங்கல் கொழுக்கட்டை பேக்கிங் இருக்க, இரண்டு பேருக்கு போதாதே என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அன்று வந்திருந்த ஆனந்தவிகடனை சொல்வனம் பகுதியை பிரித்து நீட்டினார். கிளம்பும் நோக்கில் எந்தக் கவிதை என்று படிக்கவில்லை கீழே அவரது பெயரை பார்த்ததும்பட்டாசப் போடுடாஎன்று மனம் குதித்தது.
தண்ணீர் பாட்டிலை வண்டியின் கவரில் வைத்துக்கொண்டு கவிதை பிரசுரம் குறித்து குதுகளித்தபடி வண்டியை எடுத்தேன். ’போகும் வழியில் அவரது அக்கா வீட்டருகே சற்று நிறுத்துமாறு கேட்டார்’. சென்று உடனே திரும்பியவர் கைகளில் பேக்கிங் இல்லை. அடடாகொழுக்கட்டைப் போச்சே
வழிநெடுக பிள்ளையார்கள் பரிதாபமாய் அமர்ந்திருக்க, ஒரு இடத்தில், கொட்டகையின் கீழ் நாலைந்து விடலைப் பையன்கள் ஆலுமா டோலுமா கேட்டுகொண்டிருந்தார்கள். பிள்ளையார் தனதுஏக தந்தாய வித்மஹே, வக்ர துண்டாய தீமிஹியை நினைத்து எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்பொதெல்லம் இந்தச் சிலை வைப்பதும் அது சார்ந்துகலர் பொடி அடித்துக்கொள்ளுதல், பிள்ளையார் ஊர்வலத்தில் குடித்து விட்டு குத்தாட்டம் போடுதல், நாட்டு வெடிகள் என்று சொல்லப்படும் அபாயகரமான வெடிகளை நெரிசலான சாலைகளில் வெடித்தல்என்று ஆன்மீகத்துக்கோ பக்திக்கோ தொடர்பில்லாத நடக்கும் அக்கிரமங்கள் பண்டிகையின் அர்த்தங்களைக் கொச்சைப்படுத்துகின்றனஎன்றேன். அவர்ஆமாம், மிகவும் மோசமாகிவிட்டதுஎன்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் வண்டி 60 க்கும் 70 க்குமிடையில் வெடித்துக்கொண்டிருந்தது. ஆலம்பூண்டி கடந்ததும் தூரத்தில் பார்த்தால் பள்ளம் இருப்பதே தெரியாத அள்விற்கு ஒரு ஆழ் பள்ளம் இருந்தது. கவிதையிலிருந்து, பிள்ளையாரிடமிருந்து பேச்சு அந்தப் பள்ளத்தின் அபாயத்தை நோக்கித் திரும்பியது. உண்மையில் அபாயம்தான்.”புதிதாக அல்லது இரவில் வரும் வாகனங்கள் வேகத்தில், எதிர்பார்க்கமுடியாத அந்தப் பள்ளத்தைக் கவனிக்கவில்லை என்றால் நிச்சயம் காருக்கு அச்சு உடையும், இரு சக்கரம் என்றால் தூக்கி வீசப்படலாம்என்றேன். வேதனையாகச்சுக்கொட்டினார்.
நான் சற்று தூரம் வரையிலும் உடைத்துபோட்ட தார்ச் சாலைத் துகல்கள் ஏதும் இருந்தால் போதும் எப்படியேனும் கொண்டுபோய் நிறப்பிவிடலாம் என்று பார்த்தபடிவந்தேன். ஒன்றும் கிடைக்காத நிலையில், “இந்தப்பக்கம் இருக்கும் சனங்கள் இந்தப் பாறை மண்ணையாவது கொட்டியிருக்கலாம்என்று அவரிடம் சொல்லிவிட்டு எனது சமூகக் கடனை முடித்துகொண்டேன்.
அதற்குள் திரும்ப வேண்டிய இடம் குறித்துக் குழப்பம் வர வண்டியை நிறுத்தி சாலையோரப் பெரியவரிடம் வழி கேட்டதும் அவர்கடலாடிக் குளம் கூட்டுச் சாலையில் இடது திரும்புங்கள்என்றார். அவர் சொன்ன இடத்திற்கான தொலவை அனுமானித்து வேகத்தை பயன்படுத்தினேன். சரியாக செத்தவரைச் சாலையில் திரும்பியாயிற்று.
3 கி.மீ சென்றதும் எதிர்பட்டக் கிராமத்தில் மீண்டும் பிள்ளையார். ஆனால் இங்கு வேறு சுவாரசியம் இருந்தது, “அடிக்குது குளிரு,…ம்அது சரி, அது சரி…” என்று ரஜினி சொந்தக் குரலில் கிறங்கிக்கொண்டிருந்தார். “தோழர், இவங்களை விட நாத்திகர்ளே தேவலாம் போல” (ரஜினியை சொல்லவில்லை, மக்களைத்தான். நமக்கெதுக்கு வம்பு.) என்று சொன்னதும் பின்னாலிருந்து சிரித்தார்.
இன்னும் ஒரு 4-5 கீ. மீ. சென்றதும் சாலை ஓரத்திலேயே ஒரு பிரம்மாண்டமான சிவன் சிலைக் கட்டுமானம் தென்பட்டது. மலை பின்னணியில் நன்றாக இருக்கிறதே என்று நிக்கானை எடுத்து ஜூம் லென்ஸ் மாற்றிக் கிளிக்கிக் கொண்டிருந்தேன், அப்போதுதோழர் அவர்கள் அங்கு சக்தி வாய்ந்த யோகி ஒருத்தர் இருப்பதாகவும் பௌர்ணமிகளில் கூட்டம் கட்டுக்கடங்காதுஎனவும் கூறினார். எனக்கு அதையெல்லாம் விட ஆதியோகிக்கு முன்னாடியே மலையடிவாரத்தை ஆக்கிரமித்தது நம்ம ஊர் ஆளுங்கப்பா என்று பெருமிதமாக இருந்தது.
           
பயணம் தொடர்ந்தோம். சில நிமிடங்களில் மற்றொரு சாலை விநாயகர் என்னைவிட்ருங்கடாஎன்பது போல அமர்ந்திருந்தார். அருகில் எதேச்சையாக அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் வண்டியை மெதுவாக்கி நிறுத்தினேன். தொன்மையான கிராமம் எங்களை வரவேற்றது. தெருவுக்குள் வண்டியைத் திருப்பி ஒரு வீட்டினருகே வண்டியை நிறுத்த அனுமதிக் கேட்டதும் ஒரு பெண்மணி இடம் காண்பித்தார், இன்னொருவர்மலை வரைக்குமே பாதை செல்கிறது, அங்கேயே சென்று நிறுத்தலாம்என்றார். இரண்டாவது பதில் சரியென்றுத் தோன்ற, மலையடிவாரத்திற்கு சென்று நிறுத்தினோம்.
கீழிருந்துப் பார்ப்பதற்கு ஆர்வம் தொற்றிக்கொண்டாலும் மலைப்பாக இருந்தது. சுமாராக 900 அடிகளுக்கும் மேல் இருக்கும் என்றுத் தோன்றியது. நெட்டுக்குத்தாக, மலைப்பாதை.
ஆயத்தமாகித் திரும்பினால், நாங்கள் வண்டி நிறுத்த கேட்டுக்கொண்டிருந்த இடத்தில் நின்றிருந்த சிறுவர்கள் வந்துகொண்டிருந்தது தெரிந்தது. ஏற்கனவே தொண்டூர் சென்றபோது அங்கிருந்தசார்கேசிவாவழிகாட்டியாக வந்தது நினைவுக்கு வர, அவர்களும் ஆர்வமாக இருப்பது தெரிந்து தினேஷ், முத்து இருவரையும் அழைத்துக்கொண்டோம். மலையேற்றம்.
            
பாதி வழியில் அங்கங்கே நின்று நான் படமெடுக்க, சிறுவர்கள்ணா. வாங்கண்ணா, புள்ளாருக்கு கண்ணு தொறப்பாங்க, சீக்கிரம் இறங்கணும்என்று துரிதப்படுத்தினார்கள். சாலையில் வைக்கப்பட்டிருந்த பிள்ளியாருக்கு ஏதோ பிரதிஷ்டை சடங்கு என்று புரிந்துக்கொண்டு தொடர்ந்தோம். சிறுவர்கள் சற்று நேரத்திலேயே எங்களோடு ஐக்கியமானார்கள். அப்படி கவர்ந்துவிடுவதில் தோழர், செஞ்சி தமிழினியன் கெட்டிக்காரர். அவர்கள் எந்தத் தொனியில் பேசுகிறார்களோ அப்படியே ஆரம்பித்துவிடுவார்.
இன்னும் சற்று நடந்ததும் ஆயாசமாய் வந்தது. இப்படியெல்லாம் மலையேறி நீண்ட நாட்கள் ஆகிவிட்டிருந்ததால், கால்கள் அதுபோக்கில் போவதுப் போல இருந்தது. ஓவியங்களுக்கு ஒரு 300 அடிகள் அருகில் வந்துவிட்டதாய் தெரிந்த இடத்தில் தமிழகத் தொல்லியல் துறை கம்பிகளால் ஏணி அமைத்திருந்தனர். கண்டிப்பாக அந்தப் படிகள் இல்லையென்றால் அங்கு செல்வது ஆபத்து என்பதுபோலதான் இருந்தது.
செங்குத்துப் பாறையில், ஏணி முடிந்ததும் ஒரு ஆறு அடிகள் பாறையில் செதுக்கியிருந்தப் படிகளில் பயத்தை வெளியே காண்பிக்காமல் ஏறினோம். பாதைக்குப் பழகிய சிறுவர்கள் என்பதால் அடிக்கடி முன்னெ சென்று துரிதப்படுத்தின்னார்கள். பிறகு இன்னொரு இடத்தில் ஏணி சரிந்து இருந்ததைப்போலத் தோன்ற, அருகில் சென்றதும் அது வேறு வழியில்லாமல் அல்லது மெனக்கெடாமல் அந்தப் பாறையின் வடிவத்திற்கேற்ப ஏணியை அமைத்திருந்தது புரிந்தது.
             
அதையும் கடந்து இன்னும் சில அடிகளில் சிறு குகை ஒன்றினுள் நுழைந்து செங்குத்தாக ஏறி வெளியே வந்தோம். சுற்றிலும் மலைகளையும் கீழே சின்னதாய் மாறிவிட்டிருந்த கிராமத்தையும் பார்க்க கலைப்பைத் தவிர்த்து வேறு எதனாலயோ எனக்குப் பெருமூச்சு வந்தது.
பொதுவாகவே எங்கள் பகுதி மலைகள் முழுக்க முழுக்க பாறைகளால் ஆனதவை. பறைகள் என்றால்பெரியக் கட்டிடங்கள் அளவிற்கு, சிறிய குடிசைகள் அளவிற்கு பாறைகள். நின்றுப் பர்த்தால், கிரகத்தின் பெரும் புதிராய், சரிவுகள், உயரங்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டு, திரண்டு மலைகளாய் உயர்ந்து நின்று மயக்கக்கூடியவை. எனக்கு எப்போதும், பாறைகள் பார்த்துத் தீராத, துள்ளியமாய் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை உண்டாக்கக் கூடியவையாக, பித்து நிலைக்குள் ஆழ்த்துபவையாகவே இருக்கின்றன.
இன்னும் சில அடிகளில் சுமாராக ஒரு 3000 வருட தொன்மத்துக்குள் செல்லவிருக்கிறோம்.
சென்றுவிட்டோம். ஒரு பிரம்மாண்டமாக, கீழிருக்கும் கிராமத்தைக் கவ்வத் திறந்த அந்த மலையின் வாயைப் போல இருந்தப் பாறயின் அடிப்பகுதியில் அல்லது வாயின் அன்னப் பகுதியில் ஓவியங்கள். சிலிர்ப்பாக இருந்தது. கவர்ச்சியான வண்ணங்கள் இல்லை, வடிவங்கள் தெளிவில்லை ஆனால் மனம் கண்களில் பொங்குவதாக உணர்ந்தேன். ஒரு தீண்டலில் ஆன்மா இந்த தேகத்தை கழற்றிவிட்டு 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கால எந்திரத்தில் பயனிப்பதாய் திக்கென்று இருந்தது.
குட்டிப் பசங்கள் இங்கே அங்கே என படம் எடுக்க ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்கள். தோழர் தமிழினியன் கொண்டுவந்திருந்த ஒரேயொரு தண்ணீர் பாட்டிலைத் திறந்து கைகளில் ஊற்றித்த் தெளித்து ஓவியங்களை எழுப்பிக்கொண்டிருந்தார். ஒரு பெரிய மான், மீன் போன்ற வடிவம், ஈட்டி போன்றொரு வடிவம், மாடுகள், கைகளை பறையில் வைத்து விரல்களிடை கோடிட்டு வரையப்பட்ட ஓவியம் என ஒவ்வொன்றாகத் துலங்கியது.
அந்தக் கைகளோடு உள்ளங்கை பொருத்தினால் எங்கேயேனும் சென்றுவிடுவேனோ என்று உடல் நடுங்கியது.
தோழர் தண்ணீர் தெளிப்பதில் கவனமாய் இருந்தார். அவரும் நானுமாக ஓவியங்களைப் படங்கள் எடுத்துக்கொண்டோம். தண்ணீர் தீர்ந்துவிட்டதனால்இன்னொரு முறை கண்டிப்பாக கையடக்கத் தெளிப்பான் கொண்டுவந்துத் தெளித்து முழுதுமாக படம் எடுத்துவிடலாம்என்றார் தோழர்.
ஆர்வமிகுதியில் இடைவிடாதுப் பேசிக்கொண்டிருந்தச் சிறுவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் எங்களைப் போன்ற பலருடன் வந்திருப்பது தெரிந்தது. சிறுவர்களோடு சில சுயமிகளையும், அந்தப் பகுதிச் சூழலை நிக்கானிலும் சுட்டுக்கொண்டுத் திரும்பினோம்.
கீழே வந்ததும் சிறுவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு மீண்டும் கவிதைக்குள் திரும்பினோம். நான் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் துணையெழுத்து கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையை எனக்குத் தருகிறது என்றறேன். உண்மைதான் அக்கட்டுரைகள் சிறுகதை, புதினம், கவிதை என எல்லாவற்றிற்குமான எத்தனங்களையும் தரவல்லது. முதல் இரண்டுக் கட்டுரைகளின் பாதிப்பில் எழுதியக் கவிதைகளை அவரிடம் படித்துக் காண்பித்தேன். “கதைகேட்டது போல் இருந்ததுஎன்றார். அவர் ஒரு கவிதைப் படிக்கஅவரது வீட்டிலிருந்து சகோதரி அழைத்திருந்தார். பேசிவிட்டுசெஞ்சியில் மழையாம், கவனமாக சீக்கிரம் வரச் சொன்னார்என்று சொன்னார்.
             
மணி மாலை 6 இருக்கும், அடிவாரத்தில் வண்டியை எடுக்கையில். சாலைக்கு வந்து, பிள்ளையாருக்கு கண் திறந்துக் கொண்டிருந்தவர்களைத் தாண்டி வேகமெடுத்தோம். தேசிய நெடுஞ்சாலைக்கு வரும்போதுபல்லாங் குழியில் காய் விடுவது போல வானம் ஒன்றிரண்டுத் தூரல்களை பூமியில் விடத்துவங்கியிருந்தது.
3 கி.மீ. கடந்ததும் வானமும் வேகமெடுத்தது. கடும் காற்றோடு தூரல்கள் சுளீர், சுளீரென்று அறைந்தன. தலைக் கவசக் கண்ணாடியால் எதிர் வாகனங்களின் விளக்கொளிக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. வெளிச்சத்தையும் மழை போலக் கண்பித்தது அது. திறந்தாலும் முகமெல்லாம் மழை முள் பொத்துக்கொள்கிறது. ஒரு நம்பிக்கையில் ஓட்டினேன். (தோழரிடம் இதைச் சொல்லவில்லை).
சத்தியமங்களம் கடந்து ரெட்டிப்பாளையம் அருகில் வரும்போதெல்லாம் மழை குத்திய வேகத்தை பார்த்தால் என் மார்பில் புகுந்துவெளியோடு சேர்த்து என்னை தைத்துவிடுமோ என்றுத் தோன்றியது. ரெட்டிப்பாளையம் கூட்டுச் சாலையில் அமைத்திருந்த பிள்ளையார் கொட்டகையில் தஞ்சமடைந்தோம். விளம்பரத் துனியினால் சுற்றப்பட்டு பிள்ளையார்பாதுகாக்கப்பட்டிருந்தார்’.
மழை மீண்டும் தூறலானபோதுஆலம்பூண்டிக்குச் சென்றுவிடலாம் அங்கு தேநீர் கிடைக்கும்என்று தோழர் சொல்ல, ஒரு ஒன்னரை கிலோமீட்டர்கள் பயணத்தில் ஆலம்பூண்டியை வந்துச் சேர்ந்தோம். சாலையோரத்தில் பானி பூரி விற்கும் தள்ளுவண்டியைப் பார்த்துகொண்டே முதலில் தேநீரைத் தேர்வு செய்தோம்.
தேநீர்க் கோப்பையை இரண்டு உள்ளங்கைகளுக்கிடையிலும் கோர்த்துப் பிடித்துக்கொண்டு, “இப்படிப் பிடியுங்கள் தோழர், இது மழைக்கால கோப்பை பிடிக்கும் முறை, அப்படியே சூடு இரண்டுக் கைகளின் வழியே விரவி உள்ளேச் சென்றுவிடட்டும், மேலிருந்து ஒரு சூடு உதடுகளின் வழியே உள்ளே சென்று அதனுடன் சங்கமிக்கும்என்று சிரித்தேன். அவரிடம் இதற்கு ஒரு கவிதை எழுதச் சொன்னேன்.
தேநீர் அருந்திவிட்டு பானி பூரிக் கடைக்குள் வந்து அமர்ந்தோம். இப்போது வானம் தூறலிலிருந்து மழைக்கு மாறத்துவங்கியது. கடைக்காரர் எல்லாப் பக்கமும் தன்ணீர் உருண்டு விழும்படிக்கு படுதாவின் நடுவே கம்பு ஒன்றைக் கொண்டுவந்து தூக்கி நிறுத்தினார்.
கடைக்கார நண்பரிடம்ஒரு வேண்டுகோள் வைக்கலாமா என்றேன்”, “என்ன சார்என்றார். நான், “இந்தத் தட்டை மட்டும் பயன் படுத்தாதீர்கள் இது தெர்மா கோல் போன்ற பொருளினால் செய்யப்படுகிறது, மக்குவது என்ன, நைந்துக் கூடப் போகாதுஎன்றேன். (மேலும் அது விஞானிகள் மட்டும் பயன்படுத்தக் கூடியது என்று மனசுக்குள் சொல்லிகொண்டேன்) அவர், “உண்மைதான் தான் சார், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிட வேண்டியதுதான்என்றார்.
மழை கொஞ்சம் விடுவது போலத் தெரியவே வண்டியைக் கிளப்ப, பேச்சு இப்போது, எப்போதும் என்னை எதிரில் வைத்தே பார்க்கும் நண்பர் ? ஒருவரைப் பற்றித் திரும்பியது. “சகிப்புத்தன்மையை பிள்ளைகளுக்குப் கற்பிக்கும் நான் இப்படி இருக்கக்கூடாது, அவரிடம் நட்பாகவே விரும்புகிறேன் என்றும் ஆனால் அப்படி நான் அனுகுவதை என்னுடையத் தோல்வியாக எடுத்துக் கொண்டால் எனக்கு ஆகாது நியாயம் என் பக்கம் என்றும் சொன்னேன்”. கேட்டுக்கொண்டிருந்த தோழர்காலம் கனியட்டும் இருங்கள்என்றார். நமக்குச் சாதகமாக இருந்தால் அங்கே நம்மை நல்லவனாக்கும் மனம் எவ்வளவு விசித்திரமானது?
செஞ்சி வந்து சேர்ந்தபோது மணி முன்னிரவு 7:47 ஆகியிருந்தது. வீட்டுக்கு வெளியிலேயே விட்டுவிட்டுக் கிளம்ப நினைக்க, தோழர் அன்புறுத்தி உள்ளே அழைத்தார். அவரது வீட்டுக்கு புதிய வரவாகியிருந்த ஒரு ஜான் அளவே இருந்த டாமியைப் பார்த்துக்கொண்டேஎன்னங்கத் தோழர் இன்னொரு கதையாஎன்றேன்.
சிரித்தபடி வரவேற்றச் சகோதரி கொழுக்கட்டையையும் சுண்டலும் கொடுக்க, சாப்பிட்டுகொண்டே தோழரின் சின்ன மகள் ராஜியிடம் ஆங்கிலத்தை எப்படி அனுகுவது என்று சொல்லிக்கொண்டிருந்தேன். (இவர் கிட்ட பசங்க எப்படி இருக்காங்களோ என்று குழந்தை நினைத்தாளா, தெரியவில்லை).
அம்மா உள்ளிட்ட எல்லோரிடமும் விடை பெற்று வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் உஷாவிடமும், டோஷனிடமும் நிறைய மழைக் கதை காத்திருந்தன.
பயணிக்கலாம்